'சிறை வாழ்க்கைக்கு எனது குடும்பம் அஞ்சவில்லை.." கெஹலிய : விரைவில் கைதாகவுள்ள ராஜித

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு 43 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கெஹலிய ரம்புக்வெல ,

 "இந்த அரசு என் மீதும், என் குடும்பம் மீது ஆதாரம் இல்லாத போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றது.

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைத்து வாழ்நாள் முழுவதும் துன்புறுத்த இந்த அரசு முயற்சிக்கின்றது.

சிறை வாழ்க்கைக்கு நாம் அஞ்சவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவரும். நீதி தேவதை எம்மைக் காப்பாற்றுவாள்." என கூறியுள்ளார்.

இதேநேரம் முன்னாள் அமைச்சர்ராஜித சேனாரட்ன எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படலாம் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊழல் மோசடி குற்றச்சாட்டு தொடர் பான வழக்கொன்றை அடிப்படையாகக் கொண்டே அவர் கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்படி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி எதிர்வரும் நாட்களில் ராஜித சேனாரட்ன கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.